தமிழ்நாடு

பொய் வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது- அண்ணாமலை பேச்சு

Published On 2023-08-06 10:32 GMT   |   Update On 2023-08-06 10:32 GMT
  • தி.மு.க. ஆட்சி தற்போது மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது.
  • மதுவினால் வரும் வருமானத்தை வைத்து தான் தற்போது ஆட்சி செய்து வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம்:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணத்தின் தொடர்ச்சியாக நேற்று மதுரையில் யாத்திரையை தொடங்கினார்.

இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இன்று காலையில் பாதயாத்திரை நடைபெற்றது. திருநகரில் ஆரம்பித்த அவரது நடைபயணம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு செங்கோலை பரிசாக வழங்கினர்.

மேலும் நடை பயணத்தின் போது வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். 16 கால் மண்டபத்தில் அண்ணாமலை தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி தற்போது மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது. தமிழகத்தில் சௌராஷ்டிரா மக்கள் அதிக அளவு உள்ளனர். விசைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள கொடுத்த தி.மு.க. அரசு தற்போது வரை எதுவும் செய்யவில்லை. தமிழகம் தற்போது இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாகவும், ஊழல் செய்வதில் மற்றும் மது விற்பனையில் முதல் மாநிலமாகவும் உள்ளது.

மதுவினால் வரும் வருமானத்தை வைத்து தான் தற்போது ஆட்சி செய்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் 2014-ல் 24 கோடி பெண்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர். ஆனால் தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.

201-ல் 11 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் இருந்தது. ஆனால் தற்போது 100 சதவீத பள்ளிகளில் தனி கழிப்பிடங்களை மோடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தி.மு.க. அரசு பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதில் பெரும்பாலானோருக்கு பணம் கிடைக்காது.

இதே போல நகைக்கடன், கல்வி கடன் திருப்பி வழங்கப்படும் என கூறி பொய் வாக்குறுதிகள் அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதே போலவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் பல்வேறு பொய் வாக்குறுதிகள் அளித்து உங்களை ஏமாற்ற வருவார்கள். தமிழகம், பாண்டிச்சேரி என 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை வெற்றி பெற வைத்து நமது முழு ஆதரவை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து அவர் திருமங்கலம் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபயணத்தை முடித்து விட்டு மதியம் மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

Tags:    

Similar News