தமிழ்நாடு

5 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்

Published On 2023-12-23 04:41 GMT   |   Update On 2023-12-23 04:41 GMT
  • மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 18ந்தேதி தடை விதிக்கப்பட்டது.
  • விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ராமேசுவரம்:

தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்திலும் பரவலாக மழை பெய்தது.

வங்கக்கடலில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 18ந்தேதி தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது மழை, காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக கடலுக்கு செல்ல மீன்வளத்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. தடை நீக்கப்பட்டதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் மீண்டும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News