தமிழ்நாடு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க பெண் கவுன்சிலர் குழந்தைகளுடன் தரையில் படுத்து தர்ணா

Published On 2023-09-04 10:07 GMT   |   Update On 2023-09-04 10:07 GMT
  • வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார்.
  • எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

சேலம்:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மேகலா. அ.தி.மு.க. வை சேர்ந்த இவர் இன்று காலை தனது 10 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

எனது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார். மேலும் எங்களது கோரிக்கைகளை மாதந்தோறும் மன்ற கூட்டத்தில் மனுக்களாக கொடுத்து வருகிறோம், ஆனால் எதையும் நிறைவேற்றுவதில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

ஏனென்றால் நான் கீழ் சாதியை சேர்ந்தவர், இதனால் எனது குழந்தைகளை இனி பள்ளிக்கு அனுப்ப மாட்டேன், பேரூராட்சியில் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News