தமிழ்நாடு

நெல்லையில் 5 மாவட்ட விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம்: சபாநாயகர்-அமைச்சர் பங்கேற்பு

Published On 2023-01-24 08:45 GMT   |   Update On 2023-01-24 09:02 GMT
  • தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.
  • வேளாண் விதைகளில் கலப்படங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்துறை பட்ஜெட்டுக்கான கருத்து கேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேளாண் விற்பனை முதன்மை செயலாளர் சர்க்கரை துரை விஜய ராஜ்குமார், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் இயக்குனர் பிருந்தாதேவி, நீர்வடிப் பகுதி செயல் இயக்குனர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்கள் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அதிக அளவில் மானியம் வழங்க வேண்டும், இயற்கை முறையில் வேளாண்மை செய்வதற்கு அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும், வேளாண் விதைகளில் கலப்படங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அவற்றை கேட்டறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கைகள் அனைத்தையும் சட்டமன்ற கூட்டத்தில் பேசி கலந்து ஆலோசித்து முடிந்த அளவிலான கோரிக்கைகளை வேளாண் பட்ஜெட்டில் சேர்த்து அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.

முன்னதாக அமைச்சர் பன்னீர்செல்வம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் துறை தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார்.

Tags:    

Similar News