சிறுவாபுரியில் பஸ்சில் டயர் வெடித்ததில் தூக்கிவீசப்பட்ட 4 பயணிகள் படுகாயம்
- பஸ்சின் பின்பக்க டயர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
சென்னை, வள்ளலார் நகரில் இருந்து சிறுவாபுரி வழியாக பெரியபாளையம் நோக்கி மாநகர பஸ்(எண்547) சென்று கொண்டு இருந்தது.
சிறுவாபுரியில் உள்ள பழைய சினிமா தியேட்டர் அருகே சென்றபோது பஸ்சின் பின்பக்க டயர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் பஸ்சில் இருந்த தரைபலகை பெயர்ந்து ஓட்டை விழுந்தது.
டயர் வெடித்ததில் அதன் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் இருந்த பெண் உள்பட 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்ணை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டயர் வெடித்ததில் பஸ்சில் இருந்த தரைப்பலகை பெயர்ந்து ஓட்டை விழுந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக மற்ற பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. இகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.