தமிழ்நாடு செய்திகள்

கடையம் அருகே கரடி தாக்கி வியாபாரி உள்பட 3 பேர் படுகாயம்

Published On 2022-11-06 09:45 IST   |   Update On 2022-11-06 09:45:00 IST
  • பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
  • வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று வியாபாரியை கடித்து குதறி உள்ளது.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சிவசைலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. அங்குள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள சாலை வழியே காய்கறி விற்பதற்காக வியாபாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று வியாபாரியை கடித்து குதறி உள்ளது.

இதனால் அந்த வியாபாரி அலறி துடித்துள்ளார். அப்போது அவரது கதறல் சத்தம் கேட்ட அதே பகுதியில் வசித்து வரும் சைலப்பன், நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு ஓடி சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கையில் கரடியை விரட்டுவதற்கான கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் எதுவும் இல்லை.

இதனால் சைலப்பன் மற்றும் நாகேந்திரனையும் கரடி கடித்து குதறிவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இப்பகுதியில் வனவிலங்குகள் புகுந்து அட்டாகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. எனவே கரடிகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News