தமிழ்நாடு செய்திகள்

சேலம் கடை வீதியில் மளிகை கடைக்காரர் மகனை கடத்திய 3 பேர் கைது

Published On 2022-07-01 10:03 IST   |   Update On 2022-07-01 10:03:00 IST
  • குட்கா, புகையிலை விவகாரத்தில் ஜெயராம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
  • சேலத்திற்கு அழைத்து வந்த அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம்:

சேலம் டவுன் பட்டை கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாராம் (வயது 52), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டவுன் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22), கடந்த 2-ந் தேதி காலை ஜெயராம் கடையில் இருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் காரில் அவரை கடத்தி சென்றது.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விவகாரத்தில் ஜெயராம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூர் சென்று ஜெயராமை போலீசார் விரைந்து சென்று மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தெரிந்து கொண்டனர். பின்னர் ஜெய்ராம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜெய்ராமை கடத்தி சென்ற கும்பல் பெங்களூரிவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த பாகாராம், பிரகாஷ், தினேஷ் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் சேலத்திற்கு அழைத்து வந்த அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News