தமிழ்நாடு

அவருக்கு முன்னாடி..., இவருக்கு பின்னாடி... ஒரே வாரத்தில் 2 பேரை மணந்துவிட்டு மாயமான இளம்பெண்

Published On 2023-09-29 07:31 GMT   |   Update On 2023-09-29 07:53 GMT
  • சில நாட்கள் கடந்த நிலையில் வெளியே செல்வதாக கூறி சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.
  • உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

விருதுநகர்:

மருதமலை படத்தில் நடிகர் வடிவேலு தோன்றும் காமெடி காட்சியில் ஒரு பெண் அவருக்கு முன்னாடி, இவருக்கு பின்னாடி என்று 5 பேரை மணந்துகொண்டு, 6-வது நபருடன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு வரும் காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்டது. நிஜ வாழ்க்கையில் அப்படியொரு பெண் முயன்று மாயமாகி உள்ளார்.

சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். பிளஸ்-2 வரை படித்துவிட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்த அவர் சாமிபுரம் காலனியை சேர்ந்த அருண் (23) என்பவரை காதலித்தார். பெற்றோருக்கு தெரியாமல் கடந்த மாதம் 21-ந்தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் ஒரே வாரத்தில் அருணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் மீண்டும் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இதைத்தொடர்ந்து ஒரு வாரம் கடந்த பின்பு சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த தமிழ் வளவன் (21) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

சில நாட்கள் கடந்த நிலையில் வெளியே செல்வதாக கூறி சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் தாய் புகார் கொடுத்தார்.

இதற்கிடையே அவரை, முதல் கணவரான அருண் கடத்தி சென்றிருக்கலாம் என இளம்பெண்ணின் சகோதரர் பால்பாண்டியும் (22), 2-வது கணவரான தமிழ்வளவனும் நினைத்தனர்.

அவர்கள் தங்களது நண்பர்கள் முருகேசன் (21), கார்த்தீஸ்வரன் (26) ஆகியோருடன் அருண் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த அவர்கள் அருணை சரமாரியாக தாக்கினர். தப்பி ஓட நினைத்த அவரை அரிவாளால் வெட்டியதில் கை மணிக்கட்டு துண்டானது.

மேலும் தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காயம் அடைந்தார். அருணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதை பார்த்த பால்பாண்டி உள்பட 4 பேரும் அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் துடித்த அருணை அங்கு வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் பால்பாண்டி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயமான அந்த பெண்ணையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News