கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக 122 புகார்கள்
- கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
- ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனங்களில் செல்கின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் வீதி, வீதியாக, வீடு, வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு தொகுதி தேர்தலுக்காக தேர்தல் செலவினம் தணிக்கை செய்ய பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனங்களில் செல்கின்றனர். இவர்களது இயக்கத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
இது தவிர மாநகராட்சி வளாகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களை கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 180042594980 மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 122 புகார்கள் பெறப்பட்டு அதில் 115 புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.