தமிழ்நாடு

7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2023-12-02 03:53 GMT   |   Update On 2023-12-02 03:53 GMT
  • புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
  • 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதுதொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 7 துறைமுகங்களில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

புயலின் அடுத்தகட்ட நகர்வை பொறுத்து, ஒவ்வொரு துறைமுகங்களில் மேலும் எச்சரிக்கை கூண்டுகள் அதிகரிக்கப்படும். புயலின் தன்மையை பொறுத்து மொத்தம் 11 கூண்டுகள் வரை ஏற்றுவார்கள். இதில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளதையும், துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களுக்கு ஆபத்து என்பதையும் உணர்த்தும். அதுவே 11-ம் எண் கூண்டு வானிலை எச்சரிக்கை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. மோசமான நிலை என்பதை தெரிவிக்கும்.

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News