பூந்தமல்லி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
- நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
- தற்போது ரூ.100 கோடி மதிப்புள்ள 1.01 ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி:
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் சித்திபுத்தி விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலம் பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயா தலைமையில் செயல் அலுவலர் மாதவன், பூந்தமல்லி தாசில்தார் மாலினி மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.
தற்போது ரூ.100 கோடி மதிப்புள்ள 1.01 ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது, அத்துமீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் கட்டிடத்திற்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக நசரத்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.