தமிழ்நாடு

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார்

Published On 2022-07-03 09:18 GMT   |   Update On 2022-07-03 09:18 GMT
  • மெரினா கடற்கரையில் அமையும் ரோப் கார் திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் வரை அமைக்கப்படும்.
  • நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் பகுதி வரை ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும்.

அவரது இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் சென்னையை அழகுபடுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதற்கான பரிந்துரைகளை பல்வேறு துறைகளும் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் ரோப் கார் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. சென்னையில் எங்கெங்கு ரோப் கார் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கினால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், என்ஜினீயர்களும் முடிவுக்கு வந்துள்ளனர்.

சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசியபோது, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று சில கவுன்சிலர்கள் ரோப் கார் திட்டம் பற்றி தெரிவித்தனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் அமையும் ரோப் கார் திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் வரை அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ. ஆகும். 3 கி.மீட்டருக்கு ரோப் காரில் செல்லும்போது சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இதை தவிர நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் பகுதி வரை ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் மீது ரோப் கார் இயக்கும் திட்டமும் உள்ளது. இவற்றில் முதலில் எந்த திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது என்பது பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.

Tags:    

Similar News