பொதுவழி பிரச்சனையில் கணவன், மனைவி, மகனை அருவாளால் வெட்டிய உறவினர்- போலீசார் விசாரணை
- பாதையை யார் பயன்படுத்துவது என்பதில் பழனிச்சாமி-பிரகாஷ் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
- மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கணபதி பாளையம் அருகே உள்ள சாக்கவுண்டம்பாளையம் பகுதி சேர்ந்தவர் பழனிச்சாமி (63). மனைவி கல்யாணி (53). மகன் தரணிதரன் (30) ஆகியோருடன் வசித்து வருகிறார். பழனிச்சாமியின் சித்தப்பா மகன் பிரகாஷ் (45). இவரும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பழனிச்சாமிக்கு அந்த ஊரில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அருகில் பிரகாஷின் நிலம் உள்ளது. இந்த 2 நிலங்களுக்கும் மத்தியில் பொதுவாக பொதுவழி பாதை உள்ளது. இந்த பாதையை 2 பேரும் பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையை யார் பயன்படுத்துவது என்பதில் பழனிச்சாமி-பிரகாஷ் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷின் நண்பர் தட்சிணாமூர்த்தி என்பவரின் வீடு கட்ட லாரியில் மணல் ஏற்றி கொண்டு பொதுவழி பாதையில் கொண்டு சென்ற போது பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர் லாரியை தடுத்து நிறுத்தி இந்த வழியாக செல்லக்கூடாது என்று கூறினார். இதனால் இரு தரப்பினர் கிடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவர் ஒருவர் உருட்டு கட்டை மற்றும் அருவாளால் வெட்ட தொடங்கினர்.
இதில் பிரகாஷ் அருவாளால் வெட்டியதில் பழனிச்சாமிக்கு நடு தலையில் வெட்டு விழுந்தது. இதேப்போல் கல்யாணிக்கு இடது முழங்கைக்கு கீழ் பலத்த வெட்டு விழுந்தது. தரணிதரனுக்கு தலை மற்றும் இரண்டு கைகளில் வெட்டு விழுந்தது. இதேபோல் பிரகாசுக்கு சிறிது காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இது குறித்து மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெட்டுப்பட்ட பழனிச்சாமி, அவரது மனைவி கல்யாணி, மகன் தரணிதரன் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரகாசை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.