தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ.174.48 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை-புறநகரில் ஆய்வு

Published On 2022-09-29 08:21 GMT   |   Update On 2022-09-29 08:21 GMT
  • வடகிழக்கு பருவமழை இன்னும் 20 நாட்களில் தொடங்கிவிடும்.
  • மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

சென்னை:

சென்னை மற்றும் புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

ஆனாலும் பல இடங்களில் 75 சதவீதம் அளவுக்கு தான் பணிகள் நடந்துள்ளன.

எனவே பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

வடகிழக்கு பருவமழை இன்னும் 20 நாட்களில் தொடங்கிவிடும் என்பதால் சென்னை புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை முதல்-அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதற்காக தென் சென்னைக்கு உட்பட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செம்மஞ்சேரி டி.எஸ்.எப். பின்புறம், பெரும்பாக்கம் அருகே உள்ள பாலம், நேதாஜி நகர் பிரதான சாலை, வேளச்சேரி-தாம்பரம் சாலையில் உள்ள பாலாஜி பல் மருத்துவ கல்லூரி அருகே கட்டப்படும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.

பள்ளிக்கரணை, தாமரைக்குளம் பகுதி, வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி, அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 3-வது பிரதான சாலை ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மொத்தம் ரூ.174.48 கோடி செலவில் நடைபெற்று வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், அதிகாரி சந்தீப் சக்சேனா, கலெக்டர் ராகுல்நாத் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடன் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News