தமிழ்நாடு

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு- குழிக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

Published On 2024-04-08 08:52 GMT   |   Update On 2024-04-08 09:10 GMT
  • வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது.
  • பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.

சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் சர்வதேச அமைப்பதை கைவிட்டு, வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இன்று காலை இறங்கினர். வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்ககூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Tags:    

Similar News