தமிழ்நாடு

சிறுத்தை கடித்து இறந்து கிடக்கும் ஆட்டை காணலாம் - கால் தடயங்களை வனத்துறையினர் சேகரித்த காட்சி

ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தையால் பரபரப்பு: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-10-26 10:19 GMT   |   Update On 2023-10-26 10:19 GMT
  • நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது.
  • தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு எருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தொட்ட காஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் அதிக அளவில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது. இதுகுறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடயங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர்.

தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News