தமிழ்நாடு

கடலூர் பஸ் நிலையத்தில் போலீசாரை தள்ளி விட்டு கைதி தப்பி ஓட்டம்- தீவிர தேடுதல் வேட்டை

Published On 2023-08-19 07:16 GMT   |   Update On 2023-08-19 07:16 GMT
  • அமீர் அப்துல் காதர் திடீரென்று போலீசாரை தள்ளிவிட்டு கை விலங்குடன் பஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார்.
  • கண் இமைக்கும் நேரத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கைதி தப்பி ஓடிவிட்டார்.

கடலூர்:

புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்தவர் அமீர் அப்துல் காதர் (வயது 22). இவர் மீது திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் இருந்து வருகிறார்.

நேற்று வழக்கு தொடர்பாக விசாரணைக்காக திண்டிவனம் போலீசார் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து கைதி அமீர் அப்துல் காதரை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மாலை போலீஸ்காரர்கள் முருகன், அப்துல் ரஷீத் ஆகியோர் மீண்டும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைப்பதற்காக கைதி அமீர் அப்துல் காதரை கடலூர் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்காக பஸ்சில் ஏற முயன்றனர்.

அப்போது அமீர் அப்துல் காதர் திடீரென்று போலீசாரை தள்ளிவிட்டு கை விலங்குடன் பஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கைதி அமீர் அப்துல் காதரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் வரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் கண் இமைக்கும் நேரத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருவதோடு, திண்டிவனம் போலீசாரும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News