தமிழ்நாடு செய்திகள்

கருணாநிதி நினைவாக ரூ.81 கோடி செலவில் பேனா சின்னம்- தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்

Published On 2022-12-16 13:37 IST   |   Update On 2022-12-16 13:37:00 IST
  • பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
  • ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2.21 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் கருணாநிதி நினைவிடத்தில் கட லுக்குள் இந்த பேனா நினைவு சின்னம் இடம் பெறுகிறது. ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் இந்த பேனா சின்னம் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் மெரினா கடற்கரை உள்பட நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் வரையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொட்டிவாக்கம் கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையும் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதியாக மீன்வளத்துறை 27.9.2016 அன்று அறிவித்துள்ளது. ஆமைகள் குஞ்சு பொரிக்கும் இந்த பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

இந்த பகுதியில் இறந்த நபர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் புதைக்கவோ தகனம் செய்யவோ, கல்லறை கட்டவோ நினைவாலயங்கள் கட்டவோ தடை விதிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள கடல் பரப்பில் சிலைகள் அமைப்பது மற்றும் நினைவாலயங்கள் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.

மெரினா கடற்கரையில் தற்போது கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவாலய கட்டிடப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். மெரினா கடலுக்குள் கட்ட உள்ள பேனா நினைவு சின்னத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுக்கள் இன்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில், 8 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு வருகிற பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News