தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகை படத்தில் காணலாம்.

நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள்

Published On 2023-12-12 04:08 GMT   |   Update On 2023-12-12 04:08 GMT
  • அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.
  • கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிக அருகாமையில் உள்ள இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வந்த போதிலும் கடத்தல்காரர்கள் ஊடுருவி விடுகிறார்கள்.

இந்நிலையில் ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியான குற வன்தோப்பு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உஷாரான போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் கடத் தல் கும்பல் நாட்டுப்படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். உடனடியாக கியூ பிரிவு போலீசார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.

இதைப்பார்த்த படகில் இருந்தவர்கள் ஒரு சில மூட்டைகளுடன் கடலில் குதித்து தப்பினர். பின்னர் அந்த படகை பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படையினர் சோதனையிட்டனர். அப்போது அதில் 18 மூட்டைகளில் பல லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

படகுடன் மாத்திரை மூட்டைகளை கரைக்கு கொண்டு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாத்திரைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட நாட்டுப்படகு பாம்பனை சேர்ந்த வெனிஸ்டன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News