தமிழ்நாடு

கிருஷ்ணகுமார்

உடல் உறுப்புகளை தானம் செய்த விவசாயி உடல் அரசு மரியாதையுடன் தகனம்

Published On 2023-10-24 06:07 GMT   |   Update On 2023-10-24 06:07 GMT
  • கிருஷ்ணகுமார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
  • கிருஷ்ணகுமார் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 34 வயதாகும் இவர் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 17-ந் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி கிருஷ்ணகுமார் காயம் அடைந்தார். தலையில் படுகாயம் அடைந்த கிருஷ்ணகுமார் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

அங்கு அவருக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் சுயநினைவு திரும்பாத நிலையில் இவர் மூளை சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் கிருஷ்ணகுமார் புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் டாக்டர்கள் இவர் மூளை சாவு அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதனால் கிருஷ்ண குமார் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை அறிந்த கிருஷ்ண குமார் குடும்பத்தினர் நேற்று உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர். இதனையடுத்து கிருஷ்ணகுமார் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ண குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட பிறகு கடலூர் மாவட்டத்தில் உடல் உறுப்பை தானம் செய்த முதல் நபராக இவர் உள்ளார். இவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதையுடன் கிருஷ்ண குமார் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. சிறிய கிராமத்தில் இருக்கும் விவசாயி அளவிற்கு உடல் உடல் உறுப்பு தானம் செய்வது சென்றடைந்து இருப்பதால் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் செய்த கிருஷ்ண குமாருக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில் அவரது குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News