வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
- வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போலி ஆதார் அட்டை மூலம் பணிபுரியும் தொழிலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் பல்லடம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் 3 பனியன் நிறுவனங்களில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரி பார்த்து சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் வங்கதேச தொழிலாளர்களை திருப்பூருக்கு வேலைக்கு அழைத்து வரும் முகவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.