என்.ஐ.ஏ. அதிகாரி வந்தனா தமிழகத்தைச் சேர்ந்தவர்- அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி பெற்றவர்
- சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் அதிகாரியாக வந்தனா பணியாற்றியுள்ளார்.
- ஐதராபாத், பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்த அனுபவமும் அதிகாரி வந்தனாவுக்கு உள்ளது.
கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. தென்மாநிலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா ஐ.பி.எஸ்., தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த 2004-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியானார்.
பயிற்சிக்கு பின்னர், ராஜஸ்தான் மாநில கேடர் இவருக்கு ஒதுக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கினார். அங்கு பல்வேறு இடங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். இதேபோல், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் அதிகாரியாக வந்தனா பணியாற்றியுள்ளார்.
தற்போது என்.ஐ.ஏ.வில் தென்மாநிலங்களுக்கான பிரிவில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். இவர், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்கன் இன்டலிஜன்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பு பயிற்சியையும் பெற்றுள்ளார். இது மிகவும் கடிமையான பயிற்சியாகும்.
இவர் விசாரித்த வழக்குகளில் மிகவும் முக்கியமானது கேரள மாநிலத்தில் நடந்த தங்கக்கடத்தல் வழக்கு. அதுமட்டுமின்றி ஐதராபாத், பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்த அனுபவமும் இவருக்கு உள்ளது.
இதேபோல இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. கொச்சி கிளையில் சூப்பிரண்டாக உள்ள ஸ்ரீஜித் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அசாம் மாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரும் அடிப்படைவாத அமைப்பு தொடர்பான வழக்குகளை சிறப்பாக கையாண்ட அனுபவம் பெற்றவர். திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கை இவரது தலைமையிலான குழுதான் விசாரணை நடத்தியது.