தமிழ்நாடு

பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய கிராம மக்கள்.

மொகரம் பண்டிகையையொட்டி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்

Published On 2022-08-09 06:25 GMT   |   Update On 2022-08-09 06:25 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று அவர்கள் பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடுவது வழக்கம்.
  • திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை மொகரம் பண்டிகை கொண்டப்பட்டது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன் திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையைக் இந்துக்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முதுவன் திடல் கிராமத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிகளவில் வசித்தனர். அப்போது பாத்திமா நாச்சியார் என்ற பெண் அங்கு வாழ்ந்து வந்தாகவும், அவர் இறந்த பின் முதுவன் திடல் கிராமத்தின் மையப் பகுதியில் தர்கா, பள்ளிவாசல் அமைத்து அவரை அந்த கிராம மக்கள், முஸ்லிம்கள் தெய்வமாக வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் தற்போது இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று அவர்கள் பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம் போன்றவற்றுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும், நேர்த்திக்கடன் தீர்க்க நினைப்பவை நடப்பதாகவும் கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டு மொஹரம் பண்டிகையையொட்டி முதுவன் திடல் கிராமத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், 7-வது நாள் தர்காவில் சப்பர பவனியும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை மொகரம் பண்டிகை கொண்டப்பட்டது.

இதையொட்டி பூக்குழி அமைக்கப்பட்டது. கிராம மக்கள் ஊர்வலமாக வந்து அதிகாலை 4.20 மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து பூ மொழுகுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் தலையை சேலையால் மூடியபடி பூக்குழி முன்பு அமர்ந்து இருப்பார்கள். தலையை ஈரத்துணியால் போர்த்தி, அதற்குமேல் 3 முறை தீ கங்குகளை எடுத்துப் போடுவார்கள்.

திருவிழாவின் இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பொதுமக்கள் மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச் சென்று மீண்டும் தர்காவிற்கு கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். இன்று நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியைக் காண திரளான பொது மக்கள் கூடி இருந்தனர்.

Tags:    

Similar News