தமிழ்நாடு

95 சதவீத பணிகள் முடிந்துள்ளன கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Published On 2023-04-29 08:06 GMT   |   Update On 2023-04-29 08:06 GMT
  • கோயம்பேடு பஸ் நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.
  • கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

வண்டலூர்:

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இந்த பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது ஆசியாவில் மிகப்பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.

இந்த பஸ் நிலைய பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

இதற்காக மாதத்திற்கு 6 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சரால் திறக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகளின் வாகனங்கள், பார்க்கிங் இடம், 4 தங்குமிடம், 4 உணவு கூடங்கள் அமைக்கப்படும். 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வீட்டு வசதிதுறை மற்றும் நகர்ப்புற துறை செயலாளர் அபூர்வா, மாவட்ட கலெக் டர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய துணைத் தலைவர் வி.எஸ். ஆராவமுதன், ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News