தமிழ்நாடு

பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால் தினமும் பல கோடி நஷ்டம்- அமைச்சர் துரைமுருகன்

Published On 2022-06-26 05:04 GMT   |   Update On 2022-06-26 05:04 GMT
  • காவிரி நதிநீர் கமிஷனில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும், பின்னணியில் உள்ளது போலும் உள்ளது.
  • ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு முடிவு செய்து யஷ்வந்த் சின்காவை ஆதரிக்கிறோம்.

வேலூர்:

காட்பாடி மெட்டுகுளம் கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

நான் எம்.எல்.ஏ.வாக இத்தனை ஆண்டு காலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடமில்லை. அப்படிதான் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில்:-

காவிரி நதிநீர் கமிஷனில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும், பின்னணியில் உள்ளது போலும் உள்ளது.

கர்நாடகா அரசு சொல்வதும் தவறு, காவிரி மேலாண்மை கமிஷன் சொல்வதும் தவறு. சுற்றுச்சூழல் துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28-ந் தேதி ஆம்பூர் வந்து தங்குகிறார். 29-ந் தேதி திருப்பத்தூர் விழாக்களில் பங்கேற்கிறார்.

பின்னர் வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். நலத்திட்டங்களை வழங்குகிறார்.

மறுநாள் ராணிப்பேட்டையில் விழாவை முடித்துவிட்டு சென்னை செல்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு முடிவு செய்து யஷ்வந்த் சின்காவை ஆதரிக்கிறோம்.

சமூக நீதியில் திமுக ஈடுபாடு உள்ள கட்சி. ஆனால் பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார்கள். பாராளுமன்றத்தில் நாங்கள்தான் 2-வது பெரிய கட்சி. எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News