தமிழ்நாடு

சேலத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2022-11-18 04:19 GMT   |   Update On 2022-11-18 04:19 GMT
  • சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பிசியோதெரபி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.
  • போலீசார் நிர்மல் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழிகுமார். இவரது மகன் நிர்மல் குமார் (வயது 25).

இவர் சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பிசியோதெரபி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி படித்து வந்தார்.

நிர்மல்குமாரை, தினமும் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார். அதுபோல் நேற்று காலையில் இருந்து நிர்மல்குமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவரது நண்பர் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பெற்றோர் தங்களது மகன் செல்போன் எடுக்காமல் இருப்பது பற்றி தெரிவித்தனர்.

இதையடுத்து நிர்மல்குமார் தங்கி இருந்த அறைக்கு சென்று நண்பர்கள் பார்த்தனர். அப்போது அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அறை கதவை திறக்குமாறு கூறி வெகுநேரமாக நண்பர்கள் கதவை தட்டினர். ஆனால் நிர்மல்குமார் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நிர்மல்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை கண்டு நண்பர்கள் கதறி அழுதனர். உடனடியாக நிர்மல் குமார் பெற்றோருக்கும், ஆட்டையாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆட்டையாம்பட்டி போலீசார், நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நிர்மல் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சக மாணவ-மாணவிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News