தமிழ்நாடு செய்திகள்

மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் மூத்த குடிமக்களுக்கு மருத்துவம், சட்ட ஆலோசனை முகாம்

Published On 2023-01-27 08:58 IST   |   Update On 2023-01-27 08:58:00 IST
  • மூத்த குடிமக்களுக்காக ஆண்டுக்கு 2 முறை மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாமை நடத்துகிறது.
  • உயரம், எடை, சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. போன்ற இலவச பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

சென்னை:

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக சேவை மனப்பான்மையுடன் தொழில் பயிற்சி மற்றும் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது. அதேபோல், மூத்த குடிமக்களுக்காக ஆண்டுக்கு 2 முறை மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாமை நடத்துகிறது.

அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் 28-ந்தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மூத்த குடிமக்கள் தங்களுடைய வயதுக்கு ஏற்ப தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்பது பற்றிய மருத்துவ ஆலோசனைகள், அதனைச் சார்ந்த மருத்துவ வல்லுனர் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

மேலும் உயரம், எடை, சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. போன்ற இலவச பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். பரிசோதனைக்கு பின்பு அவசியம் ஏற்பட்டால், மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும்.

ஊட்டச்சத்து நிபுணரின் பாதுகாப்பான உணவு முறைகள், கண் பரிசோதனை தேவைப்படுபவர்களுக்கு கட்டணமில்லா அறுவை சிகிச்சை, கண் கண்ணாடி மருத்துவ உதவிகளும் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், சட்ட வல்லுனர்களை கொண்டு சட்ட ஆலோசனையும் நடத்தப்படும். இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் 9361086551, 8124878192, 9659671245 ஆகிய செல்போன் எண்களில் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மூத்த குடிமக்கள் மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News