தமிழ்நாடு

கேரளாவில் அரசு அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்: நீலகிரி மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2023-09-29 10:02 GMT   |   Update On 2023-09-29 10:02 GMT
  • அதிரடிப்படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
  • வனத்தையொட்டிய தோட்டங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பாட்டவயல் அருகே கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது.

இங்கு கம்பலை எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் மலையாளிகள் மட்டுமின்றி, தமிழர்களும் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்கு இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவத்தன்று, இரவு இந்த பகுதிக்கு மாவோயிஸ்டுகள் 6 பேர் சென்றனர். அவர்கள் அங்குள்ள அரசு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பொருட்களையும் சூறையாடி உள்ளனர். அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

பின்னர் வெளியில் செல்லும் போது, அலுவலகத்தின் சுவர் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். கம்பலை தோட்டம், ஆதிவாசிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சொந்தம் என்பன உள்பட பல தகவல்கள் தமிழ் மற்றும் மலையாள மொழி கலந்து எழுதப்பட்டு இருந்தது. மேலும் வந்தவர்கள் மாவோயிஸ்ட் கபினி கொரில்லா குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், கேரள மாநில தண்டர்போல்டு அதிரடிப்படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கேரளாவில் அரசு அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலை அடுத்து அதனையொட்டி உள்ள தமிழக எல்லையான நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லையான கக்குச்சி, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இதுதவிர அதிரடிப்படை போலீசார் தமிழக எல்லைப்பகுதிகளிலும், வனத்தையொட்டிய தோட்டங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News