தமிழ்நாடு செய்திகள்

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு நாகர்கோவிலில் 4 நாட்கள் தங்கியிருந்த பயங்கரவாதி

Published On 2022-11-23 09:41 IST   |   Update On 2022-11-23 09:41:00 IST
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாரிக் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • ஷாரிக் நாகர்கோவிலில் 4 நாட்கள் முகாமிட்டு இருந்தது ஏன்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாகர்கோவில்:

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவரும், ஆட்டோவில் பின் இருக்கையில் பயணம் செய்த பயங்கரவாதியும் படுகாயம் அடைந்தனர். நாச வேலையில் ஈடுபட பயங்கரவாதி வெடிகுண்டை எடுத்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாரிக் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஷாரிக் எங்கெல்லாம் சென்றார்? யார் யாருடன் பேசினார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் குக்கர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியான ஷாரிக் 4 நாட்கள் நாகர்கோவிலில் தங்கி இருந்தது உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதாவது ஆகஸ்டு மாத இறுதியில் அவர் நாகர்கோவிலில் இருந்துள்ளார். ஆனால் எதற்காக தங்கி இருந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இங்கு தங்கியிருந்த போது யாரிடமும் அவர் செல்போன் மூலம் பேசவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் இங்கிருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் ஷாரிக் நாகர்கோவிலில் 4 நாட்கள் முகாமிட்டு இருந்தது ஏன்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, நாகர்கோவிலில் ஷாரிக் தங்கி இருந்தபோது அவரை யாரேனும் நேரில் வந்து பார்த்தார்களா? குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் ஷாரிக்குக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். பயங்கரவாதி ஷாரிக் நாகர்கோவிலில் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News