தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை

Published On 2022-06-30 07:18 GMT   |   Update On 2022-06-30 09:58 GMT
  • தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இல்லை.
  • தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மதுரை:

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23-ந் தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தகுதியற்ற தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து அரசு தரப்பில், விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News