தமிழ்நாடு

மாணவி கீர்த்தனா.

குறும்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்கு சென்ற அரசு பள்ளி மாணவி

Published On 2023-11-03 05:09 GMT   |   Update On 2023-11-03 05:09 GMT
  • சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
  • நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதி போட்டியில் பங்கேற்றார்.

திண்டுக்கல்:

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினாவிடை சார்ந்த போட்டிகள், பள்ளி, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதி போட்டியில் பங்கேற்றார்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் கொண்ட இவரது குழுவிற்கு முதல் இடம் கிடைத்தது. முன்னதாக கல்விச் சுற்றுலாவாக மாணவியை அமெரிக்கா அழைத்துச் செல்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பாஸ்போர்ட், விசா தயாரானபோதும், பள்ளி கல்வித்துறை தாமதத்தால் அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவி கீர்த்தனா இன்று ஜப்பானுக்கு புறப்படுகிறார்.

தனது குடும்பத்தினருடன் சென்னை சென்ற கீர்த்தனா தனது வெற்றி குறித்து கூறுகையில், மாவட்ட அளவில் தேர்வான எனக்கு கடந்த ஆண்டு சென்னையில் பயிற்சி முகாம் நடந்தது. அங்கு முன்னணி இயக்குனர்கள் பயிற்சி அளித்தனர். இதனையடுத்து 14 பேர் கொண்ட குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறேன். பிளஸ்-2 விற்கு பின்பு அரசு திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் படித்து திரைத்துறை இயக்க நுட்பங்களில் புதுமையை புகுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளேன். தற்போது ஜப்பானுக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 

Tags:    

Similar News