கட்டட மேற்கூரை இடிந்து சிறுமி பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
- கடலூர் மாவட்டம் மருதத்தூரில், கட்டடத்தின் மேற்கூரை இடிந்து சிறுமி சுதந்திரதேவி உயிரிழந்தார்.
- உயிரிழந்த சுதந்திர தேவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்.
கடலூர் மாவட்டம் மருதத்தூரில், கட்டடத்தின் மேற்கூரை இடிந்து உயிரிழந்த சிறுமி சுதந்திரதேவி என்பவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த சுதந்திர தேவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோவிலில் இன்று (10-9-2023) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் சுதந்திரதேவி(15) என்பவர் மீது இடிந்து விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த செல்வி.சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்."
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.