தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் காடுகளை விலைக்கு வாங்கிய வனத்துறை

Published On 2024-03-26 10:39 GMT   |   Update On 2024-03-26 10:39 GMT
  • வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
  • 7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது.

கூடலூர்:

தமிழகத்தில் 5-வது புலிகள் காப்பகமாக கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் 21-வது புலிகள் காப்பகமாகும். இங்கு மேகமலை பகுதியில் உள்ள கண்டமனூர், எரசக்கநாயக்கனூர், சாப்டூர் ஜமீன்களுக்கு சொந்தமான நிலங்கள் பட்டா காடுகளாகவும், அதில் தனியார் ஏலக்காய், காபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாதது, தொழிலாளர் பிரச்சனை, வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ஹைவேவிஸ் வனப்பகுதியில் ஏகன் ஜகா பகுதியில் அடர் வனப்பகுதிக்குள் இருந்த 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை வனத்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் பேசி விலைக்கு வாங்கியுள்ளனர்.

7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது. இந்தியாவிலேயே வர்த்தகம் இல்லாத பயன்பாட்டுக்காக வனப்பகுதியில் புலிகள் காப்பகத்துக்கு என மாநில அரசு தனியாரிடம் நிலம் விலைக்கு வாங்குவது இதுவே முதல் முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் அதிக அக்கறை செலுத்தி இந்த முயற்சியை மேற்கொண்டு தேனி மாவட்டத்தில் வனப்பகுதியை அதிகரித்துள்ளனர்.

Tags:    

Similar News