தமிழ்நாடு

9 பேரை பலிவாங்கிய பட்டாசு குடோன் விபத்து: உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

Published On 2023-03-22 11:23 GMT   |   Update On 2023-03-22 11:23 GMT
  • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
  • காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. குடோன் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News