தமிழ்நாடு செய்திகள்

மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடி சென்று உதவிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2023-04-16 17:42 IST   |   Update On 2023-04-16 17:42:00 IST
  • அனல் தாங்க முடியாத குழந்தை தன்னை தூக்கும்படி தாயிடம் கெஞ்சியது.
  • அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.

நெல்லை:

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகாவுக்கு நேற்று பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் ரெயில் நிலையத்தின் 1-வது நடை மேடையில் சக பெண் காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிரே 2-வது நடைமேடையில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் கடும் வெயிலில் சிரமத்தோடு நடந்து வந்தார்.

அந்த பெண் தனது குழந்தையை இடுப்பில் தூக்கி வைக்க முடியாமல் மூச்சு வாங்க தரையில் நடக்க வைத்து அழைத்து சென்றார். அனல் தாங்க முடியாத குழந்தை தன்னை தூக்கும்படி தாயிடம் கெஞ்சியது.

இதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.

இதை பெண் காவலர்கள் கூட்டத்தில் இருந்த சப்-இன்ஸ் பெக்டர் சுவாதிகா கவனித்தார். அவர் உடனே கர்ப்பிணி பெண்ணின் நிலையை உணர்ந்து ஓடி சென்று அந்த குழந்தையை தூக்கிச் சென்று அவரது உறவினரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது. 

Tags:    

Similar News