தமிழ்நாடு

திருச்செந்தூரில் நள்ளிரவில் பயங்கரம்- எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை

Published On 2022-06-11 06:18 GMT   |   Update On 2022-06-11 06:18 GMT
  • கண்ணன் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.
  • கண்ணன் நள்ளிரவில் ராஜ் இருந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே கரம்பவிளை சேர்ந்தவர் ராஜ்(வயது 40). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் வீரராகவபுரம் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(32). இவர் எலக்ட்ரீசியன் வேலைபார்த்து வருகிறார். கண்ணன் அந்தப் பகுதியில் செல்லும் சிறுமிகளை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் கடைக்கு சென்ற ராஜ் மகளை கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராஜ், தனது மைத்துனர் ராஜ வடிவேலுவுடன் சென்று கண்ணனிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். அப்போது கண்ணன் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து வீடு திரும்பிய ராஜ் கோவில் காவல் நிலைய போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த போலீசார் கண்ணன், ராஜ் ஆகியோரை காவல் நிலையத்திற்கு காலையில் வரும்படி தெரிவித்து விட்டு சென்றனர்.

இதனையடுத்து ராஜ் மகள்களுடன் அவரது மாமியார் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கண்ணன் நள்ளிரவில் ராஜ் இருந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜ், அவரது மைத்துனர் ராஜ வடிவேல் ஆகியோர் கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கோவில் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட கண்ணனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News