தமிழ்நாடு செய்திகள்

மார்ட்டின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்பட 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

Published On 2023-10-12 12:47 IST   |   Update On 2023-10-12 12:47:00 IST
  • கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.
  • மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு துப்பாக்கிய ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை:

கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் கேரளாவில் இருந்து 11 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், யாரும் உள்ளே வராதபடி வீட்டின் நுழைவு வாயிலையும், வீட்டில் உள்ள கதவுகளையும் மூடி விட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்டனர்.

பின்னர் வீட்டிற்குள் சென்று, அங்குள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனையிட்டனர். ஒவ்வொரு அறையையும் சில மணி நேரங்களில் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து சோதனை செய்தனர். அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்து கொண்டனர்.

மார்ட்டின் வீட்டின் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்திற்குள்ளும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

கோவையில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு, மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு துப்பாக்கிய ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது சட்டவிரோத பணிபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கடந்த மே மாதம் அவரது வீடு, உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News