ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய டிரைவரை தேடும் பணி தீவிரம்
- நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
- இன்று காலை முதல் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 22).
இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு பிரியா (22) என்ற மனைவி உள்ளார்.
சதீஷ்குமார், அவரது நண்பர்களான மனோஜ் (22), மணிகண்டன் (19), வெங்கடேஷ் (19), கண்ணன் (23) ஆகியோருடன் நேற்று மதியம் ஜேடர்பாளையத்தில் உள்ள பரிசல் துறை பகுதியில், காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சதீஷ்குமார் சென்றுள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக சதீஷ்குமார் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், மீனவர்கள் உதவியுடன் படகு மூலம் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை நேற்று தேடினர்.
இரவு வரை தேடியும் சதீஷ்குமார் கிடைக்காததால், தீயணைப்பு துறையினர் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி விட்டனர். மீண்டும் 2-வது நாளாக இன்று காலை முதல் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.