ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்
- அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
- விடுமுறை நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.
ராமேசுவரம்:
தென்னகரத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாள் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வார விடுமுறை நாட்களில் ராமேசுவரத்துக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
அதன்படி விடுமுறை நாளை முன்னிட்டு நேற்று இரவு முதல் தமிழகம் முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெயில், பஸ், வேன், கார் மூலம் ராமேசுவரம் வந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக வடமாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் பின்னர் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமியையும், பர்வத வர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
விடுமுறை நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று அதிகளவில் பக்தர்கள் வருகை தந்ததால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகளில் வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.