தமிழ்நாடு

கடன் பிரச்சனையால் மேஸ்திரி தற்கொலை- தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது

Published On 2023-08-08 07:37 GMT   |   Update On 2023-08-08 09:49 GMT
  • மனமுடைந்த கார்த்திக் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • காவேரிப்பட்டணம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சவுளூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தன் மாமாவின் மோட்டார் சைக்கிளை பூமாலை நகரை சேர்ந்த விஜயகுமார் (29) என்பவரிடம் அடமானம் வைத்து, ரூ.15 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் கடன் தொகையை கட்டவில்லை. அதனால் விஜயகுமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் கார்த்திக்கை திட்டி அடித்துள்ளனர்.

இதையடுத்து கார்த்திக் குடும்பத்தினர் விஜயகுமாரிடம், ரூ.10 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மீதம், 5 ஆயிரத்தை சிறிது நாளில் கட்டிவிடுகிறோம் என நேற்று முன்தினம் கூறியுள்ளனர். ஆனால் அதையும் கேட்காத விஜயகுமார் தரப்பினர் கார்த்திக் குடும்பத்தினரை மீண்டும் திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதில், மனமுடைந்த கார்த்திக் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை காவேரிப்பட்டணம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனை கண்டித்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சசிகுமார் மற்றும் கார்த்திக்கின் உறவினர்கள் நேற்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றி போலீசார், விஜயகுமார், அவரது தந்தை ராமசாமி (55) மற்றும் அண்ணன் சிவக்குமார்(33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News