தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் 1.71 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- முதலமைச்சர் வழங்கினார்

Published On 2022-07-09 11:58 IST   |   Update On 2022-07-09 13:46:00 IST
  • தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
  • திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். அவருக்கு வழிநெடுகிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசி பாடி புதூர் கிராமத்தில் வசிக்கும் மனவளர்ச்சிக்குன்றிய மாணவர் சிவானந்தம் என்பவரது வீட்டிற்கு சென்று அவருக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் ஆராஞ்சி கிராமத்தில் நடந்த 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கி வைத்தார்.

மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க தொடர் வாசிப்பு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். அவர் புகைப்பட விளக்க புத்தகத்தை வெளியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கி வைத்து கற்றல் உபகரணங்கள் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

திருவண்ணாமலை பெரிய தெருவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகளை வழங்கினார்.

இதையடுத்து முதல் நாள் பயணத்தின் முக்கிய நிகழ்வான திருவண்ணாமலை ஈசானிய மைதானம் அருகே அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அங்கு நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

2-வது நாளான இன்று காலை திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு 1 லட்சத்து 71 ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு ரூ.693.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் 91 முடிவுற்ற புதிய கட்டிட பணிகளை திறந்து வைத்தார். மேலும் 246 புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. விழாவையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News