"செல் ஒலிபரப்பு எச்சரிக்கை"- பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
- அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
- பொதுமக்கள் எவரும் அச்சமடைய வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அவசர காலங்களில் மக்களை எச்சரிக்கும் விதமாக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" என்னும் அதிநவீன தொழில்நுட்ப சோதனை இன்று (20-10-23) நடத்தப்பட உள்ளது.
பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை "சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.
இனி வரும் காலங்களில் சுனாமி, வெள்ளம், பூகம்பம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில், அனைத்து செல்போன்களுக்கும், ஒரே நேரத்தில் செல்போன் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" பயன்படுத்தப்படுத்த உள்ளது.
இன்று நடைபெறும் இந்த சோதனை முறையில், அனைத்து செல்போன்களிலும் வித்தியாசமான ஒலி மற்றும் அதிர்வுகள் ஏற்படும்.
இதனால், பொதுமக்கள் எவரும் அச்சமடைய வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.