தமிழ்நாடு

அரசு பஸ்சை மறித்து டிரைவர்-கண்டக்டர் தாக்குதல்: சிறுவன் உள்பட 3 பேர் கைது

Published On 2023-09-09 05:58 GMT   |   Update On 2023-09-09 05:58 GMT
  • பஸ் புதுக்கோட்டைக்கு பஸ் வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 வாலிபர்கள் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர்.
  • வாலிபர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் 6 பேரும் மோட்டார் சைக்கிள்களில் சுங்கச்சாவடிக்கு வந்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை நாகர்கோவில் கே.கே.நகரை சேர்ந்த டிரைவர் சணல்குமார் (வயது 50) ஓட்டினார். நாகர்கோவில் அம்மாண்டிவிளையை சேர்ந்த தனசேகர் (50) கண்டக்டராக பணியாற்றினார்.

பஸ் புதுக்கோட்டைக்கு பஸ் வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 வாலிபர்கள் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். நண்பர்களான அவர்கள் தங்களில் ஒருவரை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த வாலிபருக்கும், கண்டக்டர் தனசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே அந்த வாலிபரை கண்டக்டர் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு விட்டு சென்றார்.

இதுகுறித்து வாலிபர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் 6 பேரும் மோட்டார் சைக்கிள்களில் சுங்கச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் நண்பரையும் அழைத்துக்கொண்டு அந்த பஸ்சை விரட்டி சென்றனர். சில கிலோ மீட்டர் தொலைவில் அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் தாக்கி சேதப்படுத்தினர். அதன்பிறகு டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். பின்னர் 7 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி அண்ணா நகர் 5-வது தெரு காளீஸ்வரன் (வயது26), 6-வது தெரு அருண்குமார் (18) மற்றும் 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக முனீஸ்வரன் (24) உட்பட மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News