தமிழ்நாடு

படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கிய 4 மீனவர்கள்.

வேதாரண்யம் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

Published On 2023-06-11 08:19 GMT   |   Update On 2023-06-11 08:19 GMT
  • படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.
  • அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து நேற்று மதியம் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த அஜித், பாரதி, மனோ ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீன் பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்தது மூழ்கியது.

படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.

அப்போது அவ்வழியாக மீன்பிடித்துக்கொண்டு வந்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு பைபர் படகு வந்தது. அந்தப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் மீட்டு புஷ்பவனம் கடற்கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

மீனவர்கள் 4 பேரும் 5 மணி நேரம் கடலில் தத்தளித்ததாலும், அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News