தமிழ்நாடு செய்திகள்

புகையிலை பதுக்கல் வழக்கில் கைதானவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்: மதுரை ஐகோர்ட்டு அதிரடி

Published On 2022-12-15 17:07 IST   |   Update On 2022-12-15 17:07:00 IST
  • அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
  • சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மதுரை:

மதுரையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரை ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

விசாரணை முடிவில், மனுதாரர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News