தமிழ்நாடு செய்திகள்

வேலூரில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது

Published On 2022-11-15 14:47 IST   |   Update On 2022-11-15 14:47:00 IST
  • வேலூர், குடியாத்தம் போலீஸ் நிலையங்களில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
  • ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது.

வேலூர்:

காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.

இதில் அக்னிவீர் ஆண் அக்னிவீர் பெண் (ராணுவ காவல் பணி) சிப்பாய் தொழில்நுட்பம், உதவி நர்சு, உதவி நர்சு (கால்நடை) போன்ற பணியிடங்களுக்கு ராணுவ ஆட்கள் தேர்வு நடக்கிறது.

நேரடி சேர்க்கையின்போது www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அனைத்து ஆவணங்களையும் உரிய படிவத்தில் நேரில் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் எந்தவிதமான தனி நபர் அல்லது முகவர்களை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் நேரில் சென்று சுயமான போலீஸ் சான்று பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் பலர் கடைசி நாளான நேற்று போலீஸ் நிலையங்களில் சான்றிதழ் கேட்டு குவிந்தனர்.

இதனால் வேலூர், குடியாத்தம் போலீஸ் நிலையங்களில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் போலீஸ் சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆன்லைனில் இளைஞர்கள் சுய உறுதிமொழி கொடுத்து புகைப்படம் மற்றும் ஆதார் அட்டைகளை இணைத்து விண்ணப்பிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இளைஞர்களுக்கு சான்று அளிக்க 24 மணி நேரமும் பணியாற்ற போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி சுயசான்று உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டது.

மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து ராணுவ வீரர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு ராணுவ வீரர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர்.

இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று இரவு முதல் மைதானத்திற்கு வர தொடங்கினர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடி ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து ஆட்டோ மூலம் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு இரவில் சென்றனர்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News