தீ விபத்தில் சேதமடைந்த அறைகள்.
சிவகாசி அருகே இன்று பட்டாசு ஆலையில் தீ விபத்து; அறைகள் சேதம்
- கெமிக்கல் வைக்கப்பட் டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- கோடை காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர்சேவன் கிராமத்தில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வேலையை முடித்த தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் கலவையை உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அங்குள்ள ஒரு அறையில் வைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆலை திறக்கப்படவில்லை.
இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலை திறக்கப்பட்டது. அப்போது கெமிக்கல் வைக்கப்பட் டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடிது சிதறின. இதனால் அங்கிருந்த 2 அறைகள் சேதமானது.
இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு முன்னதாகவே தீ விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
இந்த தீ விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த தாசில்தார் ரங்கநாதன் விபத்து நடந்த பட்டாசு ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோடை காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே உரிய விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.