தமிழ்நாடு செய்திகள்

குவாங்கோ கழுத்தில் பத்மநாபன் தாலி கட்டிய காட்சி.

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்- தமிழ் முறைப்படி திருமணம்

Published On 2023-08-20 13:07 IST   |   Update On 2023-08-20 13:07:00 IST
  • பத்மநாபனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
  • அனைவரும் ஒன்று கூடி மன மகிழ்வுடன் வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

கடலூர்:

கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி. புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன்.

இவர் எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்கள்.

இது குறித்து மணமகன் பத்மநாபன் கூறுகையில், நான் எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து வந்தோம். அதன் பேரில் நான் குவாங்கோ பெற்றோர்களிடம் சென்று எங்கள் காதலை தெரிவித்தோம்.

அவர்கள் முழு சம்மதம் தெரிவித்த பிறகு இந்து முறைப்படி தமிழ் கலாச்சாரத்துடன் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் எனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணமகள் ரோனமி டியாங்கோ குவாங்கோ கூறுகையில் , பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நான் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தேன். அப்போது பத்மநாபனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. எனது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.தமிழ் கலாச்சாரம் மற்றும் இங்கு நடைபெறும் திருமணங்கள் மிக விமர்சையாகவும், திருவிழா போல் நடைபெறும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் நாட்டில் மிக சாதாரணமாக திருமணம் நடைபெறுவது வழக்கம்.

ஆகையால் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருவிழா போல் நடைபெற்ற எங்களது திருமணத்தில் அனைவரும் ஒன்று கூடி மன மகிழ்வுடன் வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

இவர்களது திருமணத்தை மணப்பெண்ணின் பெற்றோர்கள் வயது முதிர்வு காரணமாக ஆன்லைன் வீடியோ மூலமாக பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த திருமணத்தை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் நேரில் வந்து இருந்தனர்.

Tags:    

Similar News