தமிழ்நாடு

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி வன்கொடுமை- 8 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2022-09-26 08:15 GMT   |   Update On 2022-09-26 11:14 GMT
  • விசாரணையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்தது தெரியவந்தது
  • சிறுமியின் உறவினர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, அதற்கு உடந்தையாக இருந்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபாஜி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் விசாரித்த இந்த வழக்கில் 22 பேர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், மாரீஸ்வரன் என்பவர் இறந்துவிட்டார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு நடந்து வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மதன்குமார், சாயிதா பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபாஜி, கிரிதரன், ராஜசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணன், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார்.

இவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று நீதிபதி அறிவித்தார். சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளை அதிகாரி கண்ணன், உள்ளிட்ட 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News