தமிழ்நாடு

குளிர்பானம் என நினைத்து கரப்பான் பூச்சி மருந்தை குடித்த சிறுவன் உயிரிழப்பு

Published On 2023-01-24 04:42 GMT   |   Update On 2023-01-24 04:42 GMT
  • சிறுவன் குளிர்பானம் என நினைத்து கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தான்.
  • தர்ஷித்துக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் அவன் அலறி துடித்தான்.

கோவை:

கோவை சீரநாயக்கன் பாளையம் அருகே உள்ள திலகர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் தர்ஷித் (வயது 5). சம்பவத்தன்று சிறுவனை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர்.

மதியம் அங்கன்வாடி மையத்தில் இருந்து சிறுவன் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு விளையாட சென்றான். அவர்களது வீட்டில் கரப்பான்பூச்சி மருந்தை குளிர்பான பாட்டிலில் கலந்து வைத்து இருந்தனர்.

இதனை பார்த்த சிறுவன் குளிர்பானம் என நினைத்து கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தான். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பினான். ஆனால் கரப்பான் பூச்சி மருந்து குடித்ததை தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. சிறுவனின் பெற்றோர் அவருக்கு இரவு உணவு கொடுத்தனர். அப்போது தர்ஷித்துக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் அவன் அலறி துடித்தான்.

இதுகுறித்து சிறுவனிடம் அவரது தந்தை கேட்டபோது குளிர்பானம் என நினைத்து கரப்பான் பூச்சி மருந்தை குடித்த விவரத்தை தெரிவித்தான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் தர்ஷித் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News